யாழ்.மாநகரசபை முதல்வர் தெரிவில் மும்முனைப்போட்டி
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான போட்டியில் மூன்று கட்சிகளில் இருந்து மூன்று வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம்(12) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும். எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.
அறுதிப்பெரும்பான்மை பெறாத கட்சிகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.
முதல்வர் பதவிக்கு களமிறங்கியுள்ளவர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
