பல்வேறு குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
சுன்னாகம் காவல்துறைக்குட்பட்ட பிரதேசம் மற்றும் கொடிகாமம் காவல்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் விசேட புலனாய்வு காவல்துறையினரே இவ்வாறு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் உடுவில் பகுதியைச் சேர்ந்த 22, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வருடம் ஐப்பசி மாதம் 5ஆம் திகதி கொடிகாமம் காவல்துறை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்குள்ள வீட்டின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஏற்கனவே திருடப்பட்டதையே பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளது.
அதேபோல் கடந்த வருடம் அம்பலவாணர் வீதி சுன்னாகம் காவல்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சுன்னாகம்ம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.