யாழ். பல்கலைக்கழக மாணவனின் மர்ம மரணம் - புதிய விசாரணைகளுக்கு உத்தரவு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் இரண்டரை மணித்தியாலத்தியாலத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டிலிருந்து மர்மமான முறையில் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம், தற்கொலை என தீர்மானித்த காவல்துறையினர், அது தொடர்பிலான விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர். இளைஞரின் மரணம் குறித்து தகவல் வெளியாவதற்கு இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பதாக அவர் மரணமடைந்தமை தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமை குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து புதிய விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இளங்குன்றன் போன்று கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மருத்துவ பீடத்தின் முதலாமாண்டு மாணவியான திருலிங்கம் சாருகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.