யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபம் : வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை
இந்திய (India) அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை (Jaffna Thiruvalluvar Cultural Center), யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவதற்கான ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளதாக வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.
திருவள்ளுவர் கலாசார மண்டபத்தினை எவ்வளவு விரைவாக மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vethanayagan) வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2025) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு
இந்தியத் துணைத்தூதுவர்
இங்கு கருத்து வெளியிட்ட இந்தியத் துணைத்தூதுவர், ”இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை, அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும்.
எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும்.
அத்துடன் கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையானது சாதகமானதொரு நிலைமை.” என தெரிவித்தார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்டோர்
மேலும் தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார்.
கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
