யாழ். பல்கலைக்கழக பொது பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக இன்று (19) காலை ஆரம்பமாகியுள்ளது.
இன்று ஆரம்பமான இந்தப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாக பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பட்டங்களும், தகமைச் சான்றிதழும் வழங்கப்படும்
பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
அந்தவகையில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |