தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்
தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
“அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கேட்போர் கூடத்தில் மாலை 02 மணி முதல் 04 மணி வரை இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
நில ஆக்கிரமிப்பு
வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புகளில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமைப் பரிமாணங்களை விவாதிப்பதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா. சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |