யாழில் இரட்டைக்குழந்தைகளை பிரசவித்த இளம்தாய் கொரோனாவால் உயிரிழப்பு
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாயார் கொவிட்-19 தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளன. “கடந்த 4ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.