திடீரென விழுந்து விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம் : விமானி உட்பட இருவர் பலி
இந்தியாவின் (India) - ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து இன்றைய தினம் (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில், விமானி உட்பட இருவர் பரிதாபமாக பலியானதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம்
அதன்படி, விபத்துக்குள்ளான போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ள நிலையில் சேதமடைந்த விமானத்தில் இருந்து விமானியின் உடல் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் என்ன? பலியான விமானி மற்றும் மற்றொரு நபர் யார்? என்ற அடையாளங்கள் இன்னும் இந்திய இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து இடம்பெற்ற போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல்துறையினர், இராணுவ அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
