விஜய்யின் ஜனநாயகனுக்கு வந்த சோதனை: திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை வழக்கு இன்று(20) சென்னை உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சபை சான்றிதழ் கொடுக்க தாமதித்ததால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
தணிக்கை சபையின் வாதம்
வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தணிக்கை சபையின் தரப்பில், “ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். மறுதணிக்கை செய்ய மேலதிகமாக 20 நாள்கள் தேவைப்படுகிறது.

அதன்பின்பும், சான்றிதழ் கொடுக்க எங்கள் தரப்பில் தாமதமானால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகியிருக்கும்” என வாதிக்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனத் தரப்பு சட்டத்தரணியின் பதில்
தொடர்ந்து, ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனத் தரப்பு வழக்குரைஞர், “மறுதணிக்கை குறித்து தணிக்கை சபை எங்களை முறையாக அணுகவில்லை. டிச. 29 ஆம் திகதிக்குப் பின் அனைத்தும் எங்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. தணிக்கை சபை நடவடிக்கைகள் மன உளைச்சலைத் தருகின்றன. திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகாததால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். மேலும், தணிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருத வேண்டும். ” எனக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திகதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |