இலங்கைக்கு உதவுவது தொடர்பில் ஜப்பான் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறை விடயத்தில் இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு வழங்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடாக்கி மிசுகொஷி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களில் ஒருவரான ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட ஏனைய கடன் வழங்கும் நாடுகளுடன் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்க விரும்புவதாக ஹிடாக்கி மிசுகொஷி குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாக காணப்படுவதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 வீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இருதரப்பு கடனில் சுமார் 3.5 பில்லியன் டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. கடன் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் போதிலும், இலங்கையின் பொருளாதாரம் மீண்ட பின்னரே பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் தூதுவர் மிசுகோஷி தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை
கட்நத 2020 ஆம் ஆண்டில், வர்த்தகத் தலைநகரான கொழும்புக்கான 1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடரூந்து திட்டத்தை, நிதிச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியது.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைத்து, முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர், பொருளாதார மீட்பிற்கான கடன் உதவியை பெறுவதற்கு ஏற்கனவே கடன் வழங்கிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.