ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரிகளை தப்பியோட விட்ட காவல்துறையினர்
கொழும்பு, ஜின்துபிட்டியிலுள்ள சலூன் ஒன்றில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளிகள் தப்பியோடும் போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி சலூனுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்காமல் மறைந்து நின்ற குற்றச்சாட்டில் ஆட்டுப்பட்டி தெரு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்ய முயற்சி செய்யவில்லை
அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற இருவரை நேருக்கு நேர் பார்த்துள்ளனர்.

எனினும் தப்பியோடியவர்களை அதிகாரிகள் தடுக்கவோ அல்லது கைது செய்யவோ முயற்சி செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, துப்பாக்கி ஏந்தியிருந்த காவல்துறை சார்ஜன்ட், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றபோது அவர்களை நோக்கிச் செல்லாமல், தனது ஜீப் வண்டியின் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பணி இடைநீக்கம்
மேலும் டி-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த கான்ஸ்டபிள், அதை இயக்க முயற்சிப்பது போல நடிப்பதும் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

கடமையை உரிய முறையில் செய்யத் தவறிய 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவ்துறை தலைமையகம் இவர்களைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பி சென்றபோது, அவர்களைப் பிடிக்காமல் இருந்ததற்கு பின்னால் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என ஆராய காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |