ஊடகவியலாளரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல் (காணொலி)
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற எமது பிராந்திய ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவப்பிரதீபனை (நாராயணன்) தாக்கிய நபரை மார்ச் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர்படுத்தினர்.
காவல்துறையினரின் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 04.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் தொலைபேசி தொடர்பான அறிக்கையினையும் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் செங்கலடி வைத்தியசாலைக்கு சென்ற காவல்துறை தனது தொலைபேசியினை பெற்றுச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.
வந்தாறுமூலை சந்தைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் நியாயம் கேட்டு கடந்த 26.2.2022 அன்று கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தனது தொலைபேசியூடாக காணொளி எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் வே.நந்தகுகுமார் (கண்ணன்) என்பவரால் தாக்கப்பட்டிருந்தார்.
இச் செயற்பாட்டிற்கு பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




