காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு 6 மாதத்திற்குள் நீதி
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை

முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 988 காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.