வாவியில் மிதந்து வந்த நினைவு தூபியால் பெரும் பரபரப்பு
மட்டக்களப்பு (Batticaloa) - கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து அமைக்கப்பட்ட இரண்டு தூபிகள் மிதந்து வந்ததையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் நேற்று (17.05.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகளே இவ்வாறு கல்லடி பாலத்து வாவியில் மிதந்து வந்துள்ளது.
இன அழிப்பின் நினைவுத் தூபி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன அழிப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனை கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில், டச்பார் பகுதி வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடி படகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர்.
முள்ளிவாய்கால்
சுமார் 4 அடி கொண்ட சதுரமான ரெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மொழுகுதிரி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.
இன அழிப்பு நினைவு கூரும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இது எங்கிருந்து வாவியில் விடப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.
மீட்கப்பட்ட இன அழிப்பு தூபியை காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு நிருபர் : சரவணன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




