ரிசாத் வீட்டில் சிறுமி துஷ்பிரயோகம், மரணம்! அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க சவால்
ஜனநாயகத்தை பற்றி பேசும் எதிர்க்கட்சியினர், ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீயிட்டு உயிரிழந்துள்ள மலையகத்தைச் சேர்ந்த சிறுமி குறித்து மௌனம் சாதிப்பது ஏன் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்தகாலத்தில் ஜனநாயகத்தை பற்றி பேசியவர்கள், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் றிசாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஒருவர் தீயிட்டு உயிரிழந்துள்ளார்.
இது பற்றி நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேசவில்லை. எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர் ஒருவரது வீட்டில்தான் இந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமி உயிரிழந்துள்ளமை மாத்திரமல்லாது பொலிஸ் விசாரணைகளில் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடிந்தால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அவரை வெளியேற்றுங்கள். குறைந்தப்பட்சம் தற்காலிகமாகவேனும் தடை விதியுங்கள்.
கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தீர்கள்.
ஆனால், எதிர்கட்சிகளாக ஐ.தே.கவும், ஜே.வி.பியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த சிறுமி பற்றி ஒருவார்த்தையைக்கூட பேசவில்லை.
முடிந்தால் இந்த விடயத்தில் முதுகெலும்புடன் செயற்படுங்களென கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.