கபில சந்திரசேன மரண வழக்கு: FBI வசம் ஒப்படைக்கப்படும் கைப்பேசி
சிறிலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணையில் 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து கடந்த மாதம் (08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சாட்சிகளுக்கு அழைப்பாணை
இந்த நிலையில், கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பாசன் அமரசேன, இன்று (02-06-2026) இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

அத்தோடு, உயிரிழந்தவரின் கைப்பேசியை FBI வழியாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றப்பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சை நிறப் பட்டியை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சாட்சிச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரமும் உயர் நீதிமன்றச் சட்ட இலக்கம் 31 இன் விதிகளின் பிரகாரமும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அல்லது அவரது சாட்சிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எழுத்துமூல அல்லது வாய்மூல விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்ததாக நீதவான் தனது உத்தரவின் போது தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணைகளை வழங்கிய நீதிபதி, அவ்விரு சாட்சிகளையும் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகிச் சாட்சியமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய மேலதிக விசாரணைக்காக வழக்கை ஐந்தாம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |