வழக்கிலிருந்து கரன்னாகொடவை விடுவிக்கு தீர்மானம்- நீதித்துறை மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளானதாக சீற்றம்!
தமது பிள்ளைகளைக் கடத்தி காணாமல் ஆக்கிய சிறிலங்கா கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு எடுத்த தீர்மானத்திற்கு தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
உயிர்சென்றாலும் பிள்ளைகளைத் தேடியறியும் தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் எச்சரித்துள்ள அவர்கள், சிறிலங்காவின் நீதித்துறை மீதான நம்பிக்கையீனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் 05 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேரது கடத்தல் வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரது இந்தத் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வசந்த கரன்னாகொடதான் பிரதான கொலையாளி என்றும் கூறினார்கள்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்ணான்டோ, சிறிலங்கா நீதித்துறை மீதான நம்பிக்கைகுறைந்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகையை கையளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டபோது வசந்த கரன்னாகொட தலைமறைவாகினார். அதன்பின் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று கோட்டாபய ராஜபக்ஷவுடன் அருகில் அமர்ந்திருந்தார். சுமார் 600ற்கும் அதிகமான குற்றப்பத்திரிகை இவ்வாறு தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏதோவொரு வகையில் இலஞ்சம் மற்றும் கையூட்டல்கள் இடம்பெற்றிருக்கலாம் அல்லது வழக்குகளை சமரசப்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயம் பற்றி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிட தீர்மானித்துள்ளோம்.
புதிதாக சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட சஞ்ஜீவ ராஜரட்ணம் மீதும் எமக்கு சந்தேகம் உள்ளது. அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவாக இருக்கலாம். ஆனால் ராஜபக்ஷவினருக்காக நம்பிக்கையாக செயற்படக்கூடாது. நீதித்துறை மீதும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றுள்ள பெற்றோருக்கு வயது செல்கிறது. சிலர் உயிரிழந்துவிட்டார்கள். வடக்கு கிழக்கிலும் பெற்றோர் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை.
ஜெனீவா சென்றால் அரசாங்கத்தினர் உள்நாட்டு பொறிமுறை பற்றி பேசுகின்றார்கள். ஆனால் உள்நாட்டில் இராணுவத்தினர் மீது கைவைக்க இடமளியோம் என்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.