ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வளைகுடா நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், நேற்றிரவு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னரே இந்தப் பயணம் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் துணிச்சலுடன் பணியாற்றி வரும் பிரித்தானியப் படை வீரர்களுக்குப் பிரதமர் நேரில் நன்றி தெரிவிப்பதுடன் அப்பகுதியில் உள்ள நட்பு நாடுகளின் கூட்டுத் தற்காப்பிற்காக பிரித்தானியா வழங்கிய பாதுகாப்பு உதவிகளையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகம்
பிராந்தியப் பாதுகாப்பு குறித்துப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 110-இற்கும் மேற்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதல்களைப் பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்துத் தடுத்துள்ளன.
அத்தோடு, பிரித்தானிய விமானப்படை (RAF) சுமார் 1,600 மணிநேரத்திற்கும் மேலாக வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம் பிராந்திய நிலைத்தன்மையில் பிரித்தானியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்த ஸ்டார்மர் திட்டமிட்டுள்ளார்.
தற்போது எட்டப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்டார்மர், இதனை ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாற்றப்போவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா தீவிரமாகப் பாடுபடும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |