2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களின் மாகாண ரீதியான பெறுபேறுகள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில், பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் மேல் மாகாணம் (69.43 வீதம்) முதலிடத்தில் உள்ளது. இங்கு பரீட்சைக்குத் தோற்றிய 53,275 மாணவர்களில் 36,987 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகத் தகுதி
வடமேல் மாகாணம் 68.48 வீதம் மற்றும் வட மாகாணம் 66.91 வீதம் ஆகியன முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றவர்களில் மேல் மாகாணம் அதிக எண்ணிக்கையையும் (2,328 மாணவர்கள்), அதிக சதவீதத்தையும் (4.37 வீதம்) கொண்டுள்ளது.

வடமத்திய மாகாணம் (60.91 வீதம்) பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளதுடன், அங்கு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் (11.02 வீதம்) மற்றைய மாகாணங்களை விட அதிகமாகக் காணப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் 66.12 வீதம் பேர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து விண்ணப்பதாரர்களின் மாகாண ரீதியான பெறுபேறுகள் இதில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பரீட்சார்த்திகள்
அனைத்து விண்ணப்பதாரர்களையும் கருதும் போது, பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் 65.19 வீதம் பெற்று வட மாகாணம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மேல் மாகாணம் 63.76 வீத சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், தென் மாகாணம் 63.69 வீத சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தவர்களின் சதவீதம் 12.75 வீதம் ஆகக் காணப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாகப் பரீட்சைக்குத் தோற்றிய 281,810 விண்ணப்பதாரர்களில் 176,527 (62.64 வீதம்) பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |