நள்ளிரவில் நடந்த கெரவலப்பிட்டிய பங்கு விற்பனை விவகாரம்! உயர் நீதிமன்றில் இன்று விசாரணை
கெரவலப்பிட்டிய 'யுகதனவி" மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணை இடம்பெறவுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட 10 இற்கும் மேற்பட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமெரிக்க நிறுவனம், நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை சட்டமா அதிபர் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு தனியான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.