ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு அடுத்ததாக நியமிக்கப்படவுள்ள நபர் குறித்து அந்நாட்டின் நிபுணர்கள் சபை தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் அரச செய்திச் சேவையான பார்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அச்சபையின் உறுப்பினரான அயதுல்லா மொஹமட் மெஹ்தி மிர்பாகேரி, பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு நிலையான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரின் பெயர் இதுவரை உத்தியோகபூர்வமாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை செய்யப்பட்ட அலி கமேனி
தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருப்பதால், இந்தச் செயல்முறை மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இது சர்ச்சைக்குரியதாக அமையக்கூடாது என்றும் மிர்பாகேரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் நான்கு தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்த அலி கமேனி, தமது வாரிசை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்நாட்டின் மதகுருமார்கள் தலைமையிலான அதி உயர் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அடுத்த அதி உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், 88 சிரேஷ்ட மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபைக்கே உரியது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |