கோமாளிக்கூத்தான கிளிநொச்சி DCC கூட்டம்...! WWE-க்கே சாவால் விட்ட அரசியல் தலைமைகள்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அரங்கேறிக் கோமாளிக்கூத்தாக முடிந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே, தனக்கு இன்னும் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திலேயே அதிரடியாக அமர்ந்து விளாசிய பெருமைக்குரிய நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், நேற்றைய கூட்டத்திற்குள் நுழைந்தபோதே பின்னணியில் அதிரடி இசை ஒலிப்பது போன்ற பாவனையில்தான் நுழைந்தார்.
ஊழலை ஒழிப்பேன் என ஆவணங்களைக் காட்டி அவர் பாய்ந்த பாய்ச்சல் இருக்கிறதே... ஐயகோ அதைப்பார்த்து அருகில் இருந்த காவல்துறை அதிகாரியே, அந்த ஆவணங்களுக்குள் ஏதேனும் வெடிபொருள் இருக்கிறதா என்று அஞ்சும் அளவுக்கு இருந்தது அவர் காட்டிய அதிரடி.
ஊழல் விவகாரத்தை ஆதாரத்தோடு நீதிமன்றத்திலோ அல்லது சபையிலோ விவாதிப்பதை விட, கேமரா முன்னால் அதிகாரிகளை ஒருமையில் பேசினால்தான் இணையத்தில் விளம்பரம் தேட முடியும் என்ற தற்கால டிஜிட்டல் அரசியல் தத்துவத்தை அவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்.
பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் சொந்த பிரச்சினை மாத்திரம் பேசிவிட்டு, இங்கு வந்து ஊழலுக்குக் குரல் கொடுப்பது என்ன விதமான அக்கறை என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது.
அடுத்ததாக, நம் கடற்றொழில் அமைச்சர்.... நாங்கள் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் மாண்புமிகுக்கள் என்ற லேபிளோடு அமைதியாக அமர்ந்திருந்த அமைச்சருக்கு, இந்தத் தமிழ் எம்.பியின் அலப்பறையைப் பார்த்ததும் பொறி தட்டிவிட்டது.
பிறகு என்ன அவரும் சீறி பாய்ந்து நேருக்கு நேர் வாக்குவாதத்தில் இறங்க, நாங்கள் மிகவும் நாகரிகமான அரசாங்கம் என்று இத்தனை நாளாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம், கிளிநொச்சி வெயிலில் அப்படியே உருகிப் போனது.
அமைச்சரே, நீங்களும் அவரோடு சண்டைக்குப் போனால் அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அதிகாரிகள் தங்களுக்குள் யோசிப்பதற்குள், அமைச்சர் கையை நீட்டி சைகை காட்டி நம் எம்.பியை அடக்க முயன்ற காட்சிகள், திரைப்படங்களின் இறுதி மோதல் காட்சிகளை நினைவுபடுத்தின.
இந்த இரண்டு தரப்பினரும் மோதிக்கொள்வதைப் பார்த்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், “ஐயா.. நீங்கள் விளம்பரத்திற்காகச் சண்டை போடுகிறீர்கள்.
இறுதியில் நாங்கள் ஏன் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் அலைய வேண்டும்” என உஷாராகி, அப்படியே கூட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற, கூட்டமும் எவ்வித முடிவுகளுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு இந்த நிகழ்வு, தற்கால அரசியல்வாதிகளின் டிஜிட்டல் விளம்பர மோகத்தையும் மக்கள் நலன் சார்ந்த பொறுப்பற்ற தன்மையையும் அப்பட்டமாகத் தோல்வியுரித்துக் காட்டியுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய ஒரு உத்தியோகபூர்வ தளம், இன்று கேமராக்களுக்கு முன்னால் நாடக மேடையாக மாற்றப்பட்டிருப்பது அப்பட்டமான சீரழிவாகும்.
ஒருபுறம், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் நாடாளுமன்ற மாண்புகளை மறந்து அதிகாரிகளை ஒருமையில் பேசி இணையத்தில் தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் தமிழ் எம்பிக்களின் அரசியல் முதிர்ச்சியின்மை...
மறுபுறம், மாற்றத்தின் மாண்புமிகுக்கள் என்ற பிம்பத்தோடு வந்து ஒரு சலசலப்பைக் கண்டதும் தங்களின் நிதானத்தை இழந்து சண்டைக்கு நிற்கும் ஆளும்தரப்பு அமைச்சரின் பலவீனம் என இருதரப்புமே இங்கு அம்பலப்பட்டுப் போயுள்ளனர்.
அரசியல்வாதிகள் தங்களின் சுய விளம்பரத்திற்காக நடத்தும் இந்த மலிவான சண்டைகளுக்குள் பலியாகாமல், அரச அதிகாரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது தார்மீக ரீதியில் சரியான நகர்வாக இருந்தாலும், இறுதியில் ஒட்டுமொத்தப் பாதிப்பும் ஏதுமறியா கிளிநொச்சி மக்களுக்கே போய் சேருகிறது.
சத்தமும், சலசலப்பும், சினிமாத்தனமான மோதல்களும் மட்டுமே தற்கால அரசியலின் இலக்கணமாகிப் போன சூழலில், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் என்பது இத்தகைய கோமாளிக்கூத்துகளுக்குள் நசுக்கப்பட்டு விடுகிறது என்பதே கசப்பான அரசியல் யதார்த்தம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |