கிளிநொச்சி வாள்வெட்டுத் தாக்குதல்! சாட்சியங்களை மறைக்க ஏற்பாடு?
கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிஸார் முற்படுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், சாட்சியங்களை மறைக்க முற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இரவு 1 மணியளவில் 119 இலக்க அவசர அழைப்புக்கு தகவல் வழங்கியதாகவும், அதன் பின்னர் வெள்ளம் காரணமாக பொலிஸார் அவ்விடத்திற்கு உடனடியாக வரமுடியாதுள்ளதாக தெரிவித்ததாகவும் பின்னர் காலையே அவர்கள் வருகை தந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறிப்பிடும் அவர்கள், காலை வந்த பொலிஸார் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தடயப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அன்று மாலை தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலத்திற்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாறாக தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் நடமாடியதற்கான சிசிரிவி காட்சிகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மற்றம் சான்றுகளை மறைக்க முற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தாக்குதல்தாரிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.