15 ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம்
பதினைந்து ஆண்டுகளாக ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் குறித்து தற்போது தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முதல் முறையாக பகிரங்க கலந்துரையாடலை நடத்துவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிவுல் ஓயா திட்டமானது 1983ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஒரு போகம் விவசாயம் செய்யும் விவசாயிகளை இரண்டு போகம் விவசாயம் செய்ய வைப்பதே திட்டத்தின் நோக்கமாக காணப்படுவதாகவும் கூறினார்.
திட்டத்தில் பயனடையும் தரப்பினர் தொடர்பான விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கிம்பிலிவெவ பகுதியில் 37 வீடுகள் நீரில் மூழ்கும் நிலை போன்ற விடயங்கள் மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிவுல் ஓயா நீர்தேக்கத்தின் நீரேந்து பகுதிக்குள் அகப்பட்டு பாதிக்கப்படும் வவுனியா வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான வெடிவைத்தகல் மற்றும் மருதோடை ஆகிய தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பில் எவ்வித குறிப்புகளும் திட்ட முன்மொழிவில் இடம்பெறவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் குறித்து தற்போது தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முதல் முறையாக பகிரங்க கலந்துரையாடலை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திட்டத்தால் பயனடையும் மக்களை அழைத்துள்ள போதிலும், பாதிக்கப்படும் மக்களையும் தரப்பினரையும் அழைக்காதது பாரபட்சமான செயல் எனவும் கேள்வி எழுப்பினார்.
பூர்வீக குளங்கள்
நீரேந்து பகுதி வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காடாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தபோது, அதனை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை விடுவிக்க வனவள திணைக்களத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களை புனரமைத்து 2000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள NIAP மற்றும் பின்னர் SIHRAN நிறுவனங்களூடாக திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டினால் அவை கைகூடவில்லை எனவும், தற்போது அந்த நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திட்டத்தின் மூலம் 2330 ஹெக்டயர் நிலம் நீரில் மூழ்கும் என மகாவலி அதிகாரசபை தெரிவிப்பதைக் காட்டிலும், அதைவிட அதிகளவான நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
காடுகளை அழிப்பதால் யானை - மனித மோதல் அதிகரிக்கும் என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பயனடையும் தரப்பினருக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் தமிழ் மக்களே இதனால் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |