கொக்குத்தொடுவாயில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள்: கண்டுகொள்ளாத பிரதேச செயலகம் (படங்கள்)
கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.
புலிபாய்ந்தகல் கடற்கரை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது வனஇலாகா கையகப்படுத்தியுள்ளது.

கடற்கரை பகுதி தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள்.
அப் பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களுமாக கிராம சேவையாளர் அவர்களுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதோடு எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
பௌத்த பிக்கு
அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போது கிராம சேவையாளரால் அவ் வாடிகளை அகற்றும்படியும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி சென்றார். ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அகற்ற கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடி அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தர்க்கப்படும்போது நாங்கள் முன்பு குறிப்பிட்டது போல் அங்கே புத்த பிக்கு ஒருவர் வர இருப்பதாகவும் 300 குடும்பங்களுக்கு மேல் குடியமர்த்த இருப்பதாகவும் கூறப்பட்ட தகவல்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் அங்கு இருந்தவர்களுடன் உரையாடியுள்ளார்.

இருப்பினும் அங்கிருந்தவர்களுக்கு இவ் விடயத்தை தெளிவுபடுத்திவிட்டு மேலதிக அரசாங்க அதிபருக்கும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தருக்கும் தொடர்புகொண்டு இவ்வாறான அத்துமீறல்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது என்பதனையும் 28 நாட்களுக்குள் சட்டத்தின்படி அகற்றப்பட வேண்டிய வாடிகள் நேற்று (14) இரண்டரை மாதமாகியும் அகற்றப்படாதுள்ளது.
அதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை போதாது என்பதனை சுட்டிக்காட்டியிருந்தேன். அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்தாவது உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்கள்.

இருப்பினும் பிரதேச செயலகத்திற்கு சென்று இவ் விடயம் தொடர்பில் கதைப்பதற்கு உள்ளோம். இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்பட வேண்டும். அத்துமீறி வாடி அமைப்பது பிழையான செயற்பாடு என்பதனை கூறிக்கொள்கிறோம் என்றார்.

