குடத்தனை அரச காணி விவகாரம்: அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் விசனம்
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு J/420 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட அரச காணிகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் தமது கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாக பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், களநிலைமையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிர்வாக உத்தரவு
குறிப்பிட்ட காணிகள் அரச காணிகள் தான் என்பதை காணி திணைக்களம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வட மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
வட மாகாண காணி ஆணையாளர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான உயர்மட்ட உத்தரவுகள் வழங்கப்பட்டும், மருதங்கேணி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் ஆகியோர் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"அரசுக்குச் சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்படும் போதும் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் போதும், அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன்? சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் தட்டிக்கழிப்பது யாருக்காக?" என ஊர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எச்சரிக்கை
மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கினால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், இது தொடர்பாக இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
நீண்டகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், குடத்தனை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப் போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், அரச நிர்வாக இயந்திரம் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றிச் செயற்பட்டு, சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரச காணிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.