சட்டவிரோத பொருட்களுடன் சிக்கிய கொள்கலன்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்
குளியாப்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் என்ஜின்கள், சேஸ்கள் (Chassis) மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குளியாப்பிட்டிய காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) மற்றும் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
190 விலையுயர்ந்த மதுபானப் போத்தல்கள்
இதன்போது சந்தேகத்திற்குரிய கொள்கலனை சோதனையிட்ட காவல்துறையினர், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த 42 மோட்டார் சைக்கிள் என்ஜின்கள் மற்றும் சேஸ்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

அத்துடன், அந்தப் பொருட்களுக்குள் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 190 விலையுயர்ந்த மதுபானப் போத்தல்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவை அனைத்தும் சட்டவிரோத கடத்தல் முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்படி, தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியவும், இந்த கடத்தல் வலையமைப்பின் முழுமையான பின்னணியை வெளிக்கொண்டுவரவும் குளியாப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |