குருந்தூர் மலை காணி விவகாரம் - ரணில் எடுத்துள்ள நடவடிக்கை
குருந்தூர் மலை மற்றும் திரியாய் விகாரைகளின் காணிப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நிபுணர் குழு ஒன்றை நிறுவ சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த நிபுணர் குழு நியமிக்கப்படவுள்ளது.
நிபுணர் குழு
இதன்படி, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்கு 3,000 ஏக்கர் காணியும் திருகோணமலை, திரியாய் விகாரைக்கு 2,000 ஏக்கர் காணியும் கோரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வனவள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான இந்தளவு தொகையான அரசாங்க காணிகளை தொல்பொருள் பிரதேசங்கள் எனத் தெரிவித்து என்ன அடிப்படையில் கோரப்படுகிறது என உடனடியாக ஆராயுமாறு அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பௌத்த தலைமையகமாக கருதப்படும் அநுராதபுரம் மஹாபோதி விகாரைக்கோ அல்லது சிறந்த பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கணிக்கப்படும் சிகிரியாவுக்கும் இந்தளவு காணிப்பரப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், குருந்தூர்மலை விகாரை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு இந்தளவு காணிகள் எந்த அடிப்படையில் கோரப்படுகின்றன என்பதை விஞ்ஞானப்பூர்வத் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே அதிபரின் உத்தரவில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
