குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டினை தடைசெய்தமை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய வழிபாட்டினை தடைசெய்தமை தொடர்பாக முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பூஜை வழிபாடுகளை தடுத்தமை தொடர்பிலும் காவல்துறை மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் இந்த முறைப்பாடு இன்று(14) மாலை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பொங்கல் வழிபாடு

குருந்தூர்மலை, ஆதிசிவன் ஆலயத்தில், இன்று மேற்கொள்ளப்படவிருந்த பொங்கல் வழிபாடு, பௌத்த தேரர்கள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டால், தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
குருந்தூர்மலை, ஆதிசிவன் ஆலயத்தில், இன்றைய தினம், பொங்கல் வழிபாடுகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை, பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர். எனினும், குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள குருந்தி விகாரை தரப்பினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குருந்தியைப் பாதுகாக்க பிரசாரம்

முல்லைத்தீவு குருந்தி பூமி என்ற முகப்புத்தக பக்கத்தில், 'குருந்தியைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில், பிரசாரம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம், ஆதிசிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பொங்கல் வழிபாட்டு நிகழ்வைத் தடுத்து, பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறு, முல்லைத்தீவு குருந்தி விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, தென்னிலங்கையில் இருந்து இரண்டு பேருந்துகளில் பிக்குகளுடன் சென்ற சுமார் 100 பேர் வரையிலானோர், குருந்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஆதிசிவன் ஆலயத்தில், பொங்கல் வழிபாடுகளை முன்னெடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களில், ஆலய நிர்வாகத்தினரும், பொதுமக்களும் ஈடுபட்டனர்.
இவ்வாறான நிலையில், குருந்தூர் மலையில் இன்று காலை முதல், பெருமளவான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு பிரவேசித்த குறித்த தேரர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையின சமூகத்தினர், பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதன்பின்னர், குறித்த இரு தரப்பினருக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டது.

ஆலயத்தில் பொங்கல் வைப்பதற்கு, பௌத்த தேரர்களும், பெரும்பான்மை சமூகத்தினரும், தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக, ஆலய நிர்வாகத்தினரும், மக்கள் பிரதிநிதிகளும், சட்டத்தரணிகளும் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறிருப்பினும், ஆலய தரப்பினரும், பொதுமக்களும், பொங்கல் வைக்காமல், அமைதியான முறையில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட முயற்சித்துள்ளனர். எனினும், பௌத்த தேரர்கள், அதற்கும் இடையூறு ஏற்படுத்தி எதிர்ப்பு வெளியிட்டதாக, எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது, அங்கு தொடர்ந்தும் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர், பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினர், காவல்துறையினரால், இரண்டு பேருந்துகளில் பாதுகாப்பான முறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்த ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டவர்களை, காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

