நாட்டை அபிவிருத்தி செய்ய நிலங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க வேண்டும் - திஸாநாயக்க
நாடொன்றை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் நாட்டின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.P. Dissanayaka) தெரிவித்துள்ளார்.
சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே எஸ்.பி.திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தெடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் தமது நாட்டின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் அவர்கள் முதலீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கியதால், முன்னேறியுள்ளன.
பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் கமத்தொழில் அமைச்சராக நானே நாட்டை மீண்டும் அரிசியில் தன்னிறைவடைய செய்தேன்.
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினரான நான் தற்போது, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக வெறுப்பிலும் துக்கத்திலும் காலத்தை கடத்தி வருகிறேன்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கி செல்லாது ஒரே இடத்தில் ஸ்தம்பித்துள்ளது. நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் றிஷார்ட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தெளிவான தொடர்பு இருக்கின்றது என்பதை நான் சாட்சியங்ளுடன் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டு வந்தேன்.
அவர்களுடன் இருக்கும் அரசியல் உடன்பாடுகள் காரணமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.