ரணில் மற்றும் தேசபந்து தென்னகோனுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்மொழிந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் முனைவர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் சென்றபோது அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் தேசபந்து தென்னகோன் தொடர்புபட்ட வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகியவை அவர் குறிப்பிட்ட இரண்டு வழக்குகளாகும்.
சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் இந்த முன்மொழிவை முன்வைத்ததாக அறியப்படுகிறது.
சட்டமா அதிபர்
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விக்ரமசிங்க மற்றும் தென்னகோன் வகித்த பதவிகளைக் கருத்தில் கொண்டு, வழக்குகளை விசாரிக்க தனி அமர்வை நியமிக்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்துரைத்திருந்தார்.இருவரும் அந்தந்த வழக்குகளில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இந்த முன்மொழிவு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முடிவடைந்துவிட்டதால், விசாரணையை மேற்பார்வையிடும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யுஹான் அபேவிக்ரமவுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் எட்டு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
ரணிலின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் விசாரிக்க சென்ற குற்றப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கைகள் கிடைக்கும் வரை இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 23 மணி நேரம் முன்