முல்லைத்தீவில் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்லும் மக்கள்
புதிய இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இடம்பெறுவதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 10.00 மணிவரை 24.97 வீதவாக்கு பதிவாகியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய உறுப்பினர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில், 87,800 பேர் வாக்களிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கை
அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 காவல்துறையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







