எங்களால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் - மார்தட்டுகிறது ஐ.தே.க
எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் உடைத்தெரிய முடியாதவாறு இருப்புதிரை கொண்ட சட்ட கொள்கை நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமைக்காக நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் அரசியலை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். மதம், இனம் ஆகிவற்றை பிரதானமாகக் கொண்டு அரசியல் ஈடுபடுகின்றமை, தீர்வை வழங்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது உள்ளிட்ட செயற்பாடுகள் பிரயோசனமற்றவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த நிலைப்பாடு சாதாரணமானதாகும். காரணம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.
எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் மாத்திரமல்ல எந்தவொரு அரசியல் கட்சியும் இதனை செய்யவில்லை. இதனை நினைவில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி அந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும் புதிதாக சிந்தித்து புதியவற்றை செய்வது ஐக்கிய தேசிய கட்சி ஆகும். ஐக்கிய தேசிய கட்சிக்கு இதற்கான தீர்வுகளை வழங்க முடியும். தற்போதுள்ள நிலைமையிலிருந்து மீள்வதே இன்று முதன்மை தேவையாகவுள்ளது. அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பினை வழங்க வேண்டும். 2019 ஆம் தேர்தல் பிரசாரத்தின் போதும் இதனையே கூறினோம்.
தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம், கல்வி முறைமை மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டு உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயம் , மீன்பிடி உள்ளிட்டவை அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இறந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
இன்று இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைந்துள்ளன. கொவிட் தொற்றின் பின்னர் புதிய பொருளாதார சமூகமே நாட்டில் உருவாகும். அவ்வாறெனில் அதற்கு நாம் தயாராக வேண்டும். சகல துறைகளும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். இதற்கு புதிய அரசியல் தேவையாகும்.
நாட்டையும் , பௌத்த சிங்களவாதத்தையும் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தை கைப்பற்றி எந்தவொரு அரசாங்கமும் செய்ய அதனையும் நிறுத்தி மீண்டும் நாடு வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது.
நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்களே அரசியலில் இருக்க வேண்டும். அத்தோடு இளம் முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.