பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம் - உலகளவிலும் தீவிர நெருக்கடி
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தீவிரம்
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பல நாடுகளில் சுகாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரத்தில் உலகளாவிய ரீதியில் தொற்று 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா, மத்தியகிழக்கு, மற்றும் தென்கிழக்காசியா ஆகிய 4 பிராந்தியங்களில் தொற்று அதிகரித்துள்ளமை புதிய கவலைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம்
பிரித்தானியாவை பொறுத்தவரை அங்கு தொற்று புதிய அவல சாதனையை நெருங்கி வருகின்றது.
இந்த வாரத்தில் தினசரி சராசரியாக 2 85,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வாரத்தை விட 27 சதவீத அதிகரிப்பாகும்.
எனினும் தொற்று மேலும் தீவிரமடைந்து விரைவில் தினசரி தொற்று மூன்று இலட்சத்தைத் தாண்டுமென அஞ்சப்படுகிறது.
பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினசரி தொற்று மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டி உச்சத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சிலும் மீண்டும் தொற்று
இதுபோலவே பிரான்சிலும் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 133,346 புதியதொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, இவர்களில் 15,836 பேர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், நேற்று பிரான்சில் 42 கொரோனா மரணங்கள் பதிவாகின.