தற்போதைய நிலையில் தேர்தல் தேவையில்லை - நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம்!
"நாட்டின் பொருளாதாரம் சீரான பின்னரே எந்த ஒரு தேர்தலையும் நடத்துவோம்.
தற்போதைய சூழலில் தேர்தலை நடத்த முடியாது. அரசியலைப்பு, சட்டம் என்பனவற்றை விட நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமைக்கே முன்னுரிமை வழங்க எண்ணுகிறோம்.”
இவ்வாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை விட நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம்
தொடர்ந்து அவர்,
நாடு நெருக்கடியான நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தினால் அரசியல் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது, ஆனால் நாட்டில் பொருளாதாரப் பாதிப்பு மீண்டும் உக்கிரமடையும்.
தங்களது சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
தொழிற்சங்கப் போராட்டத்தால் அரசியல் ரீதியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார், ஆனால் எந்த எதிர்க்கட்சிகளும் அரசைப் பொறுப்பேற்கவில்லை.
பின்னர் அதிபர் ரணில் மாத்திரமே தனி ஒருவராக நாட்டை பொறுப்பேற்றார், கடந்த ஆறு மாத காலத்தில் அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இந்தநிலையில், தற்போது தேர்தலை விட நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம்." இவ்வாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
