மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்
மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார்.
கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்ட நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.
ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வை. விஜயராஜ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கமரா மூலம் ஆட்டை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.

நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும் மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை திருடி கடத்தி சென்று வருவதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |