மகளின் காதல் விவகாரம் - தந்தையும், மகளும் தற்கொலை
மட்டக்களப்பு - களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று மாலை சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இன்று காலை சிறுமியின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறுமி தற்கொலைக்கு காரணம், சிறுமியின் தந்தையார் என அந்தபகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
