பிரபாகரன் உயிரோடு - பழ.நெடுமாறன் வெளியிட்ட புதிய தகவல்
2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
இது முதல் தடவை அல்ல. 1984ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தடவை சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் அறிவித்திருக்கின்றார்கள். எதற்காக இதனை செய்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியமானது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை தகர்க்க வேண்டும். அவர்களை அச்சமடையச் செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்பிவருகின்றனர் எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் உடல் டி என் ஏ சோதனை
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்தியாவில் உள்ள தடயவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் வைத்தியர் சந்திரசேகரன், சென்னை தடயவியல் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை நாங்கள் கண்டெடுத்தோம், என்று 11 மணிக்கு அறிவிக்கின்றார்கள். 11.30 மணிக்கு டிஎன்ஏ சோதனை செய்துவிட்டோம். அது பிரபாகரனின் உடல் தான் என்று அறிவித்து விட்டார்கள்.
அறிவித்தது சாதாரணமான ஆள் அல்ல. அப்போது இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சரத் பொன்சேகாதான் அறிவித்திருந்தார்.
அப்போது, வைத்தியர் சந்திரசேகர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். டி என் ஏ சோதனை என்பது ஒரு மணித்தியாலத்தில் செய்யக்கூடியது அல்ல. அதனை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆகும். அந்த பரிசோதனைக்கு, சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரின் இரத்தம் தேவைப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தார்.
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இலங்கை இராணுவம், அரசாங்கம் பொய்கூறுகிறார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை சேர்த்திருக்கின்றார்கள்.
ஒரு கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் மரணச் சான்றிதழ் கொடுத்து அவரின் பெயரை நீக்கி விடுவார்கள்.
இலங்கை அரசு பிரபாகரனை கொன்று விட்டோம், அவரது உடலை காட்டி விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஏன் மரணச் சான்றிதழ் கொடுக்கவில்லை, ஏன் குற்றபத்திரிகையில் அவரது பெயர் இருக்கின்றது.
இந்திய அரசாங்கம் அமைத்த விசாரணை குழு இன்னமும் அதனை விசாரித்துக் கொண்டிருக்கின்றது. இதெல்லாம் என்ன நாடகம். அந்தவகையில், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை, இந்திய அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை என்றுதான் தோன்றுகின்றது.
அதற்காகத்தான் அவர் இறந்துவிட்டது போன்று பொய் கூறுகிறார்கள். அப்படித்தானே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
