ஜே.வி.பியின் புரட்சியும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் - பிரசன்ன ரணதுங்க
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நாட்டையே எமக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் கையளித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களை வீதியில் இறக்கி கொரோனா தொற்று நோயை பரப்பி, மரணங்களில் எண்ணிக்கை அதிகரித்து, மீண்டும் நாட்டை மூட வைப்பதே அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் உண்மையான நோக்கம் என தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (Sirimavo Bandaranaike) ஆட்சி காலத்தில் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எமக்கு நினைவிருக்கின்றது. எனினும் 1977 ஆம் ஆண்டு முன்னாள் அரசதலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன (J.R. Jayawardena) திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி தேசிய உற்பத்திகளை அழித்தார்.
கடந்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அரசாங்கம் நாட்டின் தேசிய உற்பத்தி செயற்பாடுகளை வலுப்படுத்தியது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை முற்றாக அழித்தது.
மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டு, பொருளாதாரம் அழிக்கப்பட்ட நாட்டையே நாங்கள் 2019 ஆம் ஆண்டு பொறுபேற்றோம்.புலிகளின் பயங்கரவாத யுத்தம் போல், 88-89 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் புரட்சியும் இந்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
2019 ஆம் ஆண்டு அரசதலைவர் பதவிக்கு வந்த பின்னர், உலக கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள நேரிட்டது.இந்த தொற்று நோய் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை அழித்தமையும் நாம் எதிர்நோக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.