கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நளின் பண்டார - மதுசானி சேஹர!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும், அவரது மனைவியான மதுசானி சேஹரவிற்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவராக அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், இன்றைய தினம் அவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, அசோக அபேசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ டி சில்வா மற்றும் துஷார இந்துனில் ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.