பொய்யுரைப்பது யார்? அதிகாரிகள் பணியாற்றுவது யாருக்கு? ஆதாரத்தை அம்பலப்படுத்திய அப்பாவி விவசாயிகள்!
கடந்த தை மாதத்திலிருந்து அரச காணியாக உள்ள மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டைக்காணியை பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்களுக்கு வழங்க வேண்டுமென உண்ணாவிரத போராட்டம் உட்பட்ட பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இறுதியாக சில தினங்களுக்கு முன் இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்த கோயில்மோட்டை விவசாயிகளுக்கு குறித்த காணியை தாம் உங்களுக்கு வழங்குவதாகவும், அதற்கான ஆவணங்களை தயார்படுத்திவிட்டு 10 தினங்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்ததுடன், தற்போது சிறுபோக பயிர் செய்கை இடம்பெற்று வருவதால், நீங்கள் குறித்த காணியில் சிறுபோக பயிர் செய்கையை மேற்கொள்ளுங்கள், அதற்கான அரச மானியங்களை உங்களுக்கு வழங்க உத்தரவிடுகிறேன் என ஆளுநர் அவர்கள் தெரிவித்ததாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இத்துடன் இக்காணி பிரச்சினை முடிவுக்கு வந்ததது, இந்நிலையில்தான் கடந்த திங்கள் கிழமை காலை சில பங்குத்தந்தைகள் பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு கிராம சேவகர் அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பாலம்பிட்டி கமநல சேவைகள் உத்தியோகத்தர்களிடம், எங்களுக்கும் கோயில்மோட்டைக்காணியில் சிறுபோகம் (விவசாயம்) செய்ய இடம் தருமாறு கோரிய நிலையில், பங்குத்தந்தைகளுக்கும் – விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது, அத்துடன் பங்குத்தந்தைகள் சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை மடு பிரதேச செயலக விளையாட்டு மைதானத்தில் மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் மடு பங்குத்தந்தை மற்றும் கோயில்மோட்டை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பங்குத்தந்தைகளுக்கு கோயில்மோட்டையில் சிறுபோகம் செய்ய காணி ஒதுக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர் வலியுறுத்தியிருந்தார்,
அப்போது விவசாயிகள் தரப்பில் நீங்கள் சொல்வது போல் கொடுக்க முடியாது, குறித்த காணிகள் எங்களுக்கு சொந்தமென ஆளுநர் அவர்களே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார், அப்படியிருக்கையில் நாங்கள் ஏன் பங்குத்தந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர், உங்களுக்கு ஆளுநரால் காணி வழங்கப்பட்டது தொடர்பில் எனக்கு எந்தவித உத்தரவும் கிடைக்கவில்லையென தெரிவித்ததுடன், பங்குத்தந்தைகளுக்கு சிறுபோகம் செய்ய நாங்கள் காணி வழங்குவோமென தெரிவித்துவிட்டு விவசாயிகளின் கருத்தை கேட்க்காமல், வீடியோ எடுக்காதீர்கள் என ஊடகவியலாளருடனும் முரண்பட்டு விட்டு இடைநடுவே புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,
மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையருக்கு வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரால் கடந்த 18-ம் திகதியே கோயில் மோட்டை காணி விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும், குறித்த காணிகளில் கோயில்மோட்டை விவசாயிகள் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கான மானியங்களை வழங்குமாறும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும் ஒரு அரச அதிகாரி இப்படி பொய்யுரைத்தால் மக்களின் நிலையென்ன, பல மாதங்களாக போராடி ஆளுநரிடம் நாம் நீதியை பெற்றுவந்தால் அதை அமுல்படுத்தக்கூட மடு பிரதேச செயலாளர் உட்பட்ட எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை, என குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர், வேளாண் வளர்ச்சி துறை - மன்னார்.
கோவில்மடை குளத்தின் கீழ்ப்பட்ட நிலப்பகுதியின் கால பயிற்செய்கை தொடர்பானது.
இந்த கடிதம், மடு பிரதேச செயலாளரிற்கு வட மாகாண நில ஆணையாளரால் எழுதப்பட்ட இலக்கம் NP/28/02 கொண்ட கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது.
மேற்படி கடித்ததினால், கோயில்மோடை குளம் சார்ந்த நிலப் பகுதிகளில் கால பயிற்செய்கை தொடர்பான கட்டளைகள் வட மாகாண நில ஆளுநரால் மடு பிரதேச செயலாளரிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை அடிப்படையாகக் கொண்டு மடு பிரதேச செயலாளர் முறையான நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் வட மாகாண நில ஆளுநரால் எமக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே கோவில்மோடை விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களிற்கு கால பயிற்செய்கைக்குத் தேவையான உரம் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு ஆளுநர் ஊடக நான் உங்களுக்கு அறியத்தருகிறேன்.
இதற்கமைய நடவடிக்கைகள் எடுப்பதோடு அதை சேவையாளரிடம் அறிக்கையிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்.மோகநாதன்,
ஆளுநரின் செயலாளர்,
வடக்கு மாகாணம்.
பிரதி
செயலாளர், விவசாய அமைச்சகம் - பத்திரமுல்ல.
தலைமை ஆணையாளர், விவசாய மேம்பாட்டுத் துறை - கொழும்பு : 07.
பிரதேச செயலாளர் - மடு.