சிங்கள குடியேற்றத்தால் சின்னா பின்னமாக்கப்படும் தமிழர் இருப்பு..!
தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென்னிலங்கை பாரிய திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.
அந்த திட்டத்தின் ஒரு அங்கமாகவே, மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள் எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை.
மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வெலி ஓயா பகுதியில் முழுதாக சிங்கள மக்களுக்கே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.
தமிழர் காணி அபகரிப்பில் தொல்லியல் திணைக்களம்

இவ்வாறு தமிழர் புராதன காணிகளை அபகரிப்பதில் தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன.
அதேவேளை, மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம், தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள், தரவைகள், வழிபாட்டு இடங்களை எல்லாம் தொல்லியல் வன ஒதுக்கப் பகுதி என கையகப்படுத்தி, தமிழரை காணி அற்றவர்களாக்குவதே இந்த சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம்.
சிதைக்கப்படும் தமிழர் அடையாளங்கள்

இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் கூட தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது போர் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழர் அடையாளங்களை அழித்து, தமிழரின் இருப்பை இல்லாது செய்யும் நோக்குடன் ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
அதேவேளை, இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் இருக்கும்போது இந்து ஆலயங்கள் தொடர்பில் அதிகம் பேசுவார்.
மௌனம் காக்கும் பிரதிநிதிகள்

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் தொடர்ந்தும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
ஆனால் இன்று உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பூர்வீகம் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வரும் நிலையிலும் வாய் மூடி மௌனிகளாகவே இருக்கின்றனர்.