யாழில் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு விடுத்த உத்தரவு
யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.
விவசாயிகள் பாதிப்பு
குறிப்பாக திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகின்றது.
எனவே விவசாயிகள் இது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதால் பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது..
இதேவேளை இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கைது செய்யுமாறு உத்தரவு
இதனடிப்படையில் இந்த நடைமுறையை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தினை காவல்துறையினரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு பிரதேச செயலர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் காவல்துறையினருக்கு வழங்கினால் அவர்கள் அதனைக் கட்டுப்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு கொடுக்கும்போது இந்தக் கழிவு நடைமுறையை நடைமுறைப்படுத்த கூடாது என்ற நிபந்தனையும் பின்பற்றியே வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
