கோட்டா எடுத்த தீர்மானங்களுக்கு மகிந்த பொறுப்புக்கூற வேண்டியதில்லை - நாமல்!
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மகிந்த ராஜபக்ச காரணம் அல்ல, அதனால் அவர் அதற்கு பொறுப்புக்கூறத் தேவையில்லை.
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த பொறுப்புக்கூற வேண்டியதில்லை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானங்கள் பலவற்றில் மகிந்த ராஜபக்ச சம்பந்தப்படவில்லை.
ஆனால் காலி முகத்திடல் போராட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டமை வருத்தமளிக்கிறது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர் பொறுப்புக்கூறத் தேவை இல்லை, இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எமது வெற்றி உறுதி

நல்ல விடயங்களை மட்டும் எதிர்பார்த்தால் அரசியல் செய்ய முடியாது, கடந்த காலங்களில் இதைவிட மோசமான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தால் நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன், காடைத்தனமான செயல்களின் மூலம் எம்மை அடக்குவதால் எமது அரசியல் பயணத்தை நிறுத்திவிட முடியாது.
நாங்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதா, இல்லையா என மக்கள் தீர்மானிக்கவேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.