வடக்கு - கிழக்கு கரிநாள் பேரணி! கொந்தளிக்கும் மகிந்த தரப்பு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும், நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் ஓர் அங்கம்தான் இது.

அரசு தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்வதற்காகவே ராஜபக்சக்களை இவ்வாறு குறிவைக்கின்றது.
படையினர் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்குச் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது
கறுப்புக்கொடி
இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின் கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.

இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால், வடக்கு, கிழக்கில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தில் அங்கு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அங்கு கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டுள்ளது. எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செயலில் காட்ட வேண்டும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |