மகிந்தவின் வத்திக்கான் பயணம் -கர்தினால் வெளியிட்ட குற்றச்சாட்டு
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இத்தாலிக்கு செல்லவுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இருவரது செயற்பாடுகளும் பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று குற்றம் சாட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வத்திக்கானுக்கு விளக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, இலங்கை கத்தோலிக்க தேவாலயம் ஏற்கனவே பரிசுத்த அமைப்புக்கு நிலைமை குறித்து விளக்கியுள்ளது என்றும் கர்தினால் மால்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவில் உள்ள யூஎன்எச்சிஆருக்கு இந்த பிரச்சினையை வத்திக்கான் விரைவில் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அரசாங்கம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாங்களும் அதையே செய்வோம், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் ஏற்கனவே வத்திக்கான் பிரதிநிதியிடம் நீதி குறித்து விளக்கினோம், மேலும் இந்த விடயம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படும் என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்" என்று ஆண்டகை கூறினார்.
தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களைக் காப்பாற்ற ஒரு சதித்திட்டம் சாமர்த்தியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அரசாங்கத்துக்கு சாதகமான சூழ்நிலையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.




