தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு
தூதுவர் பதவியை வகித்துக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்கு அறிவார் என அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை என்றும், அரசியலில் அதிருப்தியடைந்த நிலையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், “நல்லவேளை தூதுவராக சென்றது. இல்லையேல் எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்” எனவும் கூறியுள்ளார்.
கோட்டபய அரசாங்கத்தில் உறுப்பினர்
தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பின்வரிசை உறுப்பினராகவே இருந்தேன். உரிய மதிப்பளிக்கப்படவில்லை.
இதனால் அரசியல் அதிருப்தியடைந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகினேன். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன்.
தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் அரசியல் செய்யவில்லை. இதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிவார்.தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும்வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன்.
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்தேன். தூதுவராக நியமிக்கப்பட்டதையிட்டு தற்போது மகிழ்ச்சியடைகிறேன். அரசியல்வாதியாக இருந்து நாட்டுக்கு முடிந்த சேவையாற்றியுள்ளேன். அதேபோல் தூதுவராக வகித்தும் சேவையாற்றியுள்ளேன்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |