அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியிலிருந்து விலகுகிறார் மகிந்த சமரசிங்க
பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றி வரும் மூத்த இராஜதந்திரி மஹிந்த சமரசிங்க, விரைவில் அப்பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே பதவி விலக முடிவு செய்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் நியமனம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், 2021 டிசம்பர் 6 அன்று மஹிந்த சமரசிங்க அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்காவிலிருந்து தடுப்பூசிகளையும் அத்தியாவசிய மருந்துகளையும் பெறுவதில் சமரசிங்க முக்கிய பங்காற்றினார்.
கோவிட்,பொருளாதார நெருக்கடியில் சிறந்த செயற்பாடு
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்காக, அமெரிக்காவிலிருந்து கணிசமான உதவியைப் பெறுவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

இதன் விளைவாக, கோட்டாபய ராஜபக்சவிற்குப் பிறகு பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், மஹிந்த சமரசிங்கவை தூதர் பதவியில் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதேவேளை, எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக அவரது சேவைகளைப் பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |