கொள்கை இல்லாதவர் மைத்திரி - போட்டுத் தாக்குகிறது ஆளும்தரப்பு
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கொள்கை இல்லாதவர் எனவும் அவரது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூலை வாசிக்கும் எவரும் அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விப் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த(Piyal Nishantha) தெரிவித்துள்ளார்.
கொள்கை இல்லாதவர்களை அரசாங்கத்தில் வைத்திருப்பது அரசாங்கத்திற்கு ஆபத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடி சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் எனவும் அது முடியாத பட்சத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு வருடங்களுக்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கொவிட் நெருக்கடியால் இரண்டு வருடங்களை முழுமையாக வீணடிக்க வேண்டியிருந்தது என்றும், எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே தவிர, தனிநபர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் பார்த்து நேரத்தை வீணடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தாலும், புத்திஜீவிகள் எதிர்க்கட்சியை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் செய்வது தவறு என்றால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் உரிய குற்றச்சாட்டிற்கு மாற்றுக் கருத்துக்களை முன்வைக்குமாறும் இராஜாங்க அமைச்சர் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
பொருட்களின் விலைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், உலகம் கிணற்றுத் தவளை போன்று அபிவிருத்தியடையவில்லை, அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை உன்னிப்பாக அவதானித்து, இலங்கையின் நிலைமை எவ்வளவு நன்றாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.