தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணம் - வலுக்கும் ஆதரவு
மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்பு மிகு மலையகம் - 200 நடைபவனிக்கு வடக்கு கிழக்கில் இருந்து ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் இந்த நடைபவணி இடம்பெற்று வருகிறது.
கிளிநொச்சி
தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம் - 200 நடைபவனி இன்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நகர் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வருகை தந்த மலையக மக்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணமாகவே மலையகப் பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மலையகம்-200 ஆதரவுப் பயணத்தில் "மன்னார் முதல் மாத்தளை வரை" இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
குறித்த நடைபயணத்தில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் , மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாகுவதற்கு மலையகத் தமிழ் மக்கள் 11 அம்ச கோரிக்ரகைகளை முன்வைத்தே நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு

இந்த நடைபவனிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நேற்றையதினம் (02) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.
இந்தப் பேரணி இரண்டாவது நாள் பயணமாக கிளிநொச்சி முதல் வவுனியா வரை பயணிக்கிறது.
யாழ்ப்பாணம்



வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணிக்கு ஆதரவான இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குறித்த நடைபவனி இடம்பெற்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பித்த நடைபவனி யாழ்நகர்ப் பகுதியை சுற்றி மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து பேருந்து ஊடாக யாழ் நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டது.
இதன் போது மதத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.